Monday, 24 February 2014

நோய் தீர்க்கும் பாகற்காய்!



நோய் தீர்க்கும் பாகற்காய்!

இயற்கையான தாவரங்கள் நமக்குப் பல்வேறு வகைகளில் உதவுகின்றன. காய்கறிகள், கனிகள் கைமாறு கருதாமல் நமக்கு நன்மைகளைத் தருகின்றன. அவ்வகையில் காய்கறிகளில் ஒன்றான பாகற்காய் நமக்குப் பல்வேறு சத்துகளை அளித்து, ஆரோக்கியத்தை நல்கி, பல்வேறு நோய்களைத் தீர்க்கின்றன. இங்கு கசப்புச் சுவை கொண்ட, ஆனால் இமாலாய மருத்துவத்தன்மை கொண்ட காய்கறி வகையில் ஒன்றான பாகற்காயின் மகத்துவத்தைப் பார்ப்போம்.

பாகற்காயின் தாயகம் இந்தியா. இந்தியாவில் முற்காலம் தொட்டே பாகற்காயைப் பல்வேறு விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். நமது முன்னோர்கள் சுவைக்கு ஒரு காய் என வகுத்து, கசப்புச் சுவையே உடம்புக்கு மருத்துவ ரீதியில் நலம் பயக்கும் சுவை எனக் கண்டறிந்து, பாகற்காயின் அருமையை உணர்ந்து, தகுந்தபடி பயன்படுத்தியுள்ளனர்.

பாகற்காய் இந்தியாவிலிருந்து சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இது ஒரு கொடி வகையாகும். வெப்ப மண்டல பிரதேசப் பயிர். பொதுவாக இரு வகைப் பாகற்காய்கள் காணப்படுகின்றன. ஆனால் சித்த மருத்துவத்தில் பழுபாகல், கொம்பு பாகல், கொல்ல பாகல், வேலி பாகல், மிதிப் பாகல் என பல்வேறு பாகற்காய்கள் உள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.

பாகற்காயில் பல்வேறு வைட்டமின்கள், சத்துகள், தாது உப்புகள் அடங்கியுள்ளன. அறுசுவைகளுக்கும் தனித்தனி மருத்துவப் பயன்கள் உண்டு. இதில் கசப்புச் சுவைக்கு தனிப்பட்ட சிறப்பு மருத்துவக் குணம் உண்டு. நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற பல தாதுச் சத்துகளும் நார்ச்சத்தும் இதில் உள்ளன. வைட்டமின் பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன. பாகற்காயில் ஹைபோகிளைசேமிக் என்ற ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தி கொண்ட அமிலம் உள்ளது. மேலும் கார குளுக்கோசைடு, நீரில் கரையும் மஞ்சள் அமிலம், ரெசின், சாம்பல் போன்றவையும் உள்ளன.

பாகற்காய் விதையிலிருந்து ஒரு வகையான நிறமற்ற, மணமற்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் தொழிலியல் துறையில் வெகுவாகப் பயன்படுகிறது. பாகற்காய் சக்கையிலிருந்து புரதச்சத்து எடுக்கப்படுகிறது.

பாகற்காயைத் துண்டுகளாக்கி கூட்டு செய்து உண்ணலாம். புளி சேர்த்து, புளிக்கூட்டாக வைக்கலாம். குழம்பாகப் பயன்படுத்தலாம். பாகற்காயைத் துண்டுகளாக்கி உலரவைத்து வறுக்கலாம். அல்லது துண்டுகளை மோரில் ஊறவைத்து, உலர்ந்த பின் பொரித்துச் சாப்பிடலாம். பாகற்காயைச் சாறாக பிழிந்து வெறும் சாறாகவோ அல்லது தேன் சேர்த்தோ சாப்பிடலாம். பாகற்காய் பழத்தை பிழிந்து சாறு எடுத்துப் பயன்படுத்தலாம். பாகற்காய் துண்டுகளை உப்பு நீரிலோ அல்லது மோரிலோ ஊற வைத்தால் இதிலுள்ள கசப்புச் சுவை குறைந்துவிடும்.

பாகற்காய் பித்தம் தணிக்கும். உடல் உரமுண்டாக்கி, பசி தூண்டி, பால் சுரப்பியாகச் செயல்படுகிறது. கண் நோய்கள், ரத்த அழுத்த நோய், மூலம், தோல் நோய், நரம்புக் கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாகவும், விஷ முறிவு மருந்தாகவும் செயல்படுகிறது.

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்...

* தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்பழங்களின் சாறைப் பிழிந்து சாப்பிட்டு வர, ரத்தம் மற்றும் சிறுநீரில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

* இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறில், சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க, சளி, இருமல் குறையும்.

* இலைச்சாறை பாதங்களில் ஏற்பட்ட வெடிப்பில் பூசி வர, வெடிப்பு மறையும்.

* வேரை நன்கு அரைத்து வெளி மூலத்தில் பூசி வர, மூலம் குணமாகும்.

* இலைகளைத் தண்டோடு எடுத்து உலர வைத்து, பொடியாக்கி காயங்கள், புண்கள் மேல் தூவி வர புண், காயம் ஆறும்.

* இலைச்சாறுடன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரை பொடி சேர்த்து, தீப்புண்கள், சுடுநீர் பட்டதால் ஏற்பட்ட காயங்கள் மேல் போட்டு வர காயங்கள் உடனே ஆறும்.

* வெறும் வயிற்றில் ஒரு கரண்டி இலைச்சாறு அருந்த வயிற்றுக் கிருமிகள் அழியும். மலச்சிக்கல் மாறும்.

* அதிகமான வீரியமுள்ள மருந்துகளால் ஏற்பட்ட தீமையை மாற்ற இலைச்சாறு அருந்தலாம்.

* பாகற்பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அருந்தினால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மாறும்.

* பாகற்காய் கூட்டை உண்டு வர, ரத்தம் சுத்திகரிக்கப்படும். வாதம், மூட்டுவலி மாறும்.

* பாகற்காய் குழம்பு உடல் பலத்தைக் கூட்டும். கண் பார்வையைத் தெளிவுபடுத்தும்.

* பாகற்காயை வறுத்து சாப்பிட்டு வந்தால், எலும்பு பலம் பெறும். பல் உறுதி பெறும்.

* நரம்புகளைப் பலப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலைக் காக்கும்.

* அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், ரத்தக் கொதிப்பு மாறும். உடல் கனம் மாறும்.

* அதிகமான மது அருந்தியதால் ஏற்பட்ட குடல் கோளாறு, நச்சுத்தன்மை, கல்லீரல் கோளாறுகளை பாகற்காய் குணப்படுத்தும்.

* பாகற்காயைப் பயன்படுத்த உடம்பில் நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.

* பாகற்காய்க்கு மருந்தை முறிக்கும் தன்மை உண்டு. எனவே, பொதுவாக நாட்டு மருந்துகள் சாப்பிடும்போது, இதைத் தவிர்க்க வேண்டும்.

* புகைப்பிடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை பாகற்காய் நீக்கும்.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...